அன்னை காளிகாம்பாள்
பராசக்தி தன்னை பல சக்தி வடிவங்களாகத் தோற்றுவித்து உலகின் தீமைகளை அழிக்கிறாள்.
அதில் ஒரு வடிவமே காளிகாம்பாள்.
இவர் காலத்தின் தேவதை.
தசமகா வித்யையின் நாயகி.
காளி என்றாலே ஆக்ரோஷ வடிவாக, கோர ஸ்வரூபமாக , கரிய நிற மேனியோடு தான் கற்பனை செய்கிறோம்.
ஆனால் அம்பிகை எடுத்த வடிவமே காளி என்பதால்
தமிழகத்தில் ஒரு தலத்தில் அழகு பொங்கும் வடிவுடனும் காட்சி அளிக்கிறாள் காளிதேவி.
அவரே சென்னயில் குடிகொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள்.
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக குடியிருந்தாள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.
இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர்.
இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டார் .
சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர்
நாயக்கர் கால கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது
திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது.
பின்னர் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது,
கோவில் கோட்டைக்குள் வந்து விட்டது.
இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
பின்னர் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் காளிகாம்பாள் கோவில் கோட்டைக்கு வெளியே தம்பு செட்டித் தெருவிற்கு இடம் மாற்றப்பட்டது
இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை.
அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருந்தனர்.
அதில் முகாலயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குய காளி பக்தர் மாவீரர் சத்ரபதி சிவாஜியும் ஒருவர்.
இவர் 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார்.
அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார்.
“யாதுமாகி நின்றாய் காளி” என்ற அவரது பாடலில் வருவது இந்த காளிகாம்பாள்தான்.
கந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில்,
கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும்,
அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்!
குறிப்பாக, ‘உள்ளம் உருகுதய்யா…’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம்.
அந்தப் பாடல் வரிகள் காளிகாம்பாள் கோவிலில் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருந்தவை.
இதை இயற்றியவர் ஆண்டவன் பிட்சை என்ற பெண்மணி.
குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ந்த நிலையில்
அநாதரவாகத் திரிந்து கொண்டிருந்த மரகதம் என்கிற பெண்மணி, ஒருமுறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்தார்.
அங்கே இருந்த சிலர் அவரைப் பிச்சைக்காரி என எண்ணி கேலி செய்து துரத்த,
அதைக் கவனித்துவிட்ட மஹா பெரியவர், அவரை அழைத்து ஆறுதல் சொல்லி,
‘வருத்தப்படாதே! நீ ஆண்டவன்பிச்சை’ என்று அனுக்கிரஹம் செய்த து அனுப்பினார்
இறைவனின் அனுக்கிரஹத்தைப் பூரணமாகப் பெற்ற ஆண்டவன்பிச்சை,
பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார்.
அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், ‘உள்ளம் உருகுதடா ’ என்ற பாடல்.
பின்னர் அது உள்ளம் உருகுதய்யா என்ற சற்றே மாற்றம் செய்யப்பட்டு நம் செவிக்கு விருந்தானது
இப்படி பல பக்தர்களை ஆசிர்வதித்த காளிகாம்பாள்,
3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள்.
கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாக வும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பார் அன்னை காளி .
ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் இங்கே அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டு
ஆணவத்தை அடக்கும் அங்குசம்.
ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம்,
சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர்
மற்றும்
தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை,
சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள்,
நவரத்ன மணிமகுடம்,
வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று
அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.
இங்கு அம்பிகையின் குங்கும பிரசாதத்தில் அவளின் துவார சக்திகளான ஜெய, விஜயர்கள் இருப்பதாக ஐதீகம்.
எனவே காளிகாம்பாள் குங்குமத்தை நெற்றியில் தரித்துக் கொண்டால்
அந்த இரு சக்திகளும் நமக்குப் பக்க பலமாக இருந்து சகல ஆபத்துகளிலிருந்தும் காப்பாள் என்பது சத்தியமான உண்மை.
வாழ்வியல் தேவைகளுக்கு மட்டுமல்ல
உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள்
அம்பாளைப் பார்க்கும் போது, அவரும் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பதை நன்றாகவே உணரலாம்.
காளிகாம்பாளிடம் மனமுருகி நாம் வேண்டும் போது ,
ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்டு அது ஒவொன்றையும் நிறைவேற்றி தருவார்
கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்… அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.
நாம் அனைவரும் ஏதோ ஓர் வேண்டுதலை மனதில் கொண்டுதான் தாய்ப்பசுவை நோக்கி ஓடும் கன்றாக ஓடுகிறோம்.
அதை உணர்ந்து,
நம் ஊழ்வினைகளை நீக்கி,
அல்லல்கள் போக்கி,
இகபர செளபாக்கியங்கள் அனைத்தும் அளித்து, தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொள்கிறாள்
பரம கல்யாணியான அன்னை
காளிகாம்பாள்..!





